நள்ளிரவு பயணத்தால் கோர விபத்து; மினி லாரி - கனரக சரக்கு வாகனம் மோதியதில் 14 பேர் பரிதாப பலி
நள்ளிரவு பயணத்தால் கோர விபத்து; மினி லாரி - கனரக சரக்கு வாகனம் மோதியதில் 14 பேர் பரிதாப பலி
UPDATED : மே 12, 2025 06:54 AM
ADDED : மே 12, 2025 06:48 AM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நள்ளிரவில் மினி லாரி - கனரக சரக்கு வாகனம் மோதியதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர்-பலோடா பஜார் சாலையில் உள்ள சரகான் அருகே பனார்சி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மினி லாரியில், வீடு திரும்பி கொண்டு இருந்தனர். மினி லாரியில் 50 பேர் சென்று கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த கனரக சரக்கு வாகனம் மோதியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது. வாகனம் ஓட்டும் டிரைவர் சற்றே கண் அசந்தாலும் விபத்து நேரிடும் வாய்ப்புகள் அதிகம். இந்த சம்பவமும் அப்படித்தான் நேரிட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.