பெங்களூரு அருகே கோர விபத்து: காரில் சென்ற ஐந்து வாலிபர்கள் பலி
பெங்களூரு அருகே கோர விபத்து: காரில் சென்ற ஐந்து வாலிபர்கள் பலி
ADDED : பிப் 16, 2026 12:02 AM

பெங்களூரு: பெங்களூரு அருகே, பஸ் மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணித்த, ஐந்து வாலிபர்கள் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே, புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 12:45 மணிக்கு, ஒரு கார் வேகமாக சென்று கொண்டு இருந்தது.
திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி, சாலை மைய தடுப்பை தாண்டி, எதிர்திசைக்கு பாய்ந்தது. அந்த வழியாக பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளி நோக்கி சென்ற அரசு பஸ்சின் முன்பக்கத்தில் கார் மோதியது.
மோதிய வேகத்தில் கார் உருக்குலைந்தது. சம்பவ இடத்திலேயே, காரில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்; ஒருவர் உயிருக்கு போராடினார். தகவலறிந்து வந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
விபத்தில், பஸ்சின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. ஆயினும், பஸ்சில் இருந்த 43 பயணியருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மாதநாயக்கனஹள்ளி போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் இறந்த ஐந்து பேரும், தொட்டபல்லாபூரின் துர்கா பிரசாத், 20, கேசவ், 19, லலித், 22, ஹர்ஷித், 20 மற்றும் தனுஷ், 20 என்பது தெரிந்தது.
இரவு நேரம் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால், காரை வேகமாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.
இவர்கள் ஐந்து பேரும் எங்கு சென்று வந்தனர் என்ற தகவல் தெரியவில்லை. 'ஜாலிரைடு' சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கார் வேகமாக வருவதை பார்த்து டிரைவர் சுதாரித்து, பஸ் சின் வேகத்தை குறைத்ததால், பஸ் பயணியர் உயிர் தப்பினர்.

