பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது நமது கடமை: சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது நமது கடமை: சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
UPDATED : ஆக 18, 2025 10:01 PM
ADDED : ஆக 18, 2025 07:41 PM

புதுடில்லி: '' பயங்கரவாதத்தை அனைத்து வடிவிலும் எதிர்த்து போராடுவது நமது கடமை,'' என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலின் அழைப்பின் பேரில் டில்லி வந்துள்ளார். இன்று( ஆகஸ்ட் 18) அவர், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது ஜெய்சங்கர் கூறுகையில், நமது கருத்துக்களை பரிமாறி கொள்ள தயாராக இருக்கிறோம். நமது ஆலோசனையானது, இந்தியா சீனா இடையிலான ஒத்துழைப்பையும், முன்னேற்றத்தை கொண்ட உறவையும் உறுதி செய்வதாக அமைய வேண்டும். இரு பெரிய நாடுகள் சந்திக்கும்போது நிச்சயம் சர்வதேச நிலவரம் குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும். நாங்கள் நேர்மையான , சமமான மற்றும் பல முனை உலக வரிசையை எதிர்பார்க்கிறோம். சர்வதேச அமைப்புகளிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
தற்போதைய சூழலில், உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், ஸ்திரத்தன்மையை பேணுவதும் தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து போராடுவது நமது கடமையாகும். நமது உறவில் கடினமான காலகட்டத்தை பார்த்துள்ளோம். தற்போது இரு நாடுகளும் அதனை தாண்டி முன்னேறி செல்கின்றன. இதற்கு இரு தரப்பிலும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை தேவை. பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலனில் கருத்தில் கொள்ள வேண்டும். வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ அல்லது போட்டி மோதலாகவோ மாறக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறுகையில், எல்லைப் பகுதியில் அமைதியை பராமரித்து வருகிறோம். ஆன்மிக யாத்திரைக்கு இந்திய யாத்ரிகர்கள் திபெத்திற்கு வருகின்றனர். நாம் நம்பிக்கையை பகிர்ந்து கொள்வதுடன், ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறோம். நமது வெற்றிக்கு ஒருவருக்கு ஒருவர் பங்களிப்பதுடன், ஆசியா மற்றும் உலகத்தின் ஸ்திரத்தன்மைக்கு பங்காற்றுவோம், என்றார். வாங் யி, நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

