படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு: காட்டுக்குள் தஞ்சமடைந்த யானை
படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு: காட்டுக்குள் தஞ்சமடைந்த யானை
ADDED : அக் 06, 2024 12:03 AM

கொச்சி: கேரளாவில், தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற யானைகள் திடீரென மோதலில் ஈடுபட்ட நிலையில், ஒரு யானை மட்டும் வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது. வனத்துறையினரின் உதவியுடன், 12 மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின் அந்த யானை மீட்கப்பட்டது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலத்தில், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
குட்டப்புழா வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் நடந்த படப்பிடிப்பில், ஐந்து யானைகள் மோதுவது போன்ற காட்சி நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது.
இதில், கேரளாவின் புதுப்பள்ளியைச் சேர்ந்த வர்கீஸ் என்பவருக்கு சொந்தமான, 57 வயதான, 'சாது' என்ற யானையும் பங்கேற்றது. இது, திருச்சூர் பூரம் நிகழ்வில் பங்கேற்று மக்களிடையே மிகவும் பிரபலமானது.
படப்பிடிப்பின் போது, யானைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து தப்பியோடினர். அப்போது, அங்கிருந்த கேமரா உட்பட ஏராளமான சாதனங்கள் சேதமடைந்தன.
இதற்கிடையே, மற்ற யானைகள் ஒன்று திரண்டு, சாது யானையை தாக்கின. இதில் மிரண்டு போன அந்த யானை, அருகே உள்ள வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது. அங்கு, வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால், வனத்துறையினரின் உதவியை படக்குழுவினர் நாடினர்.
இதையடுத்து, 12 மணி நேரத்திற்கும் மேலாக வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபின், சாது யானையை கண்டறிந்து வனத்துறையினர் வெளியே அழைத்து வந்தனர். அதன்பின், சாது யானை அதன் பாகனிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.