ADDED : பிப் 03, 2025 04:52 AM
சிக்கமகளூரு; கடன் வாங்கியவர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டும், மைக்ரோ நிதி நிறுவனம் அடங்கவில்லை. தம்பதிக்கு மைக்ரோ நிறுவன ஊழியர்கள் தொல்லை கொடுத்ததாக, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு நகரங்களில், மைக்ரோ நிதி நிறுவனங்களிடம் பலரும் கடன் வாங்கியுள்ளனர். கடனை வசூலிக்கும் பெயரில், நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்தனர். இவர்களின் தொந்தரவு தாங்காமல், தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிறுவனத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது.
சிக்கமகளூரு, கடூரின், பிரூரு அருகில் உள்ள, ஆலதஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் உமேஷ். இவர் மைக்ரோ நிதி நிறுவனத்தில் 3.85 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். 4.50 லட்சம் ரூபாய் கட்டியுள்ளனர். மேலும் 2.25 லட்சம் ரூபாய் கட்டும்படி, நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
வீட்டை ஜப்தி செய்வதாக மிரட்டினர். இவர்களின் தொல்லை தாங்காமல், உமேஷ் இரண்டு வாரமாக வீட்டுக்கே செல்லவில்லை. அவரது மனைவிக்கும் நிறுவன ஊழிர்கள் தொந்தரவு கொடுத்தனர்.
இதனால் உமேஷ், தன் மனைவியுடன், நேற்று முன் தினம் எஸ்.பி., விக்ரம் அமட்டியை சந்தித்து புகார் அளித்தார். அவரும் நிதி நிறுவன ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, பிரூரு போலீசாருக்கு உத்தரவிட்டார்.