மாஸ்கோ சென்ற விமானத்தில் தீ; டில்லி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்
மாஸ்கோ சென்ற விமானத்தில் தீ; டில்லி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்
UPDATED : மே 06, 2025 09:31 PM
ADDED : மே 06, 2025 08:47 PM

புதுடில்லி: பாங்காக்கிலிருந்து மாஸ்கோவிற்குப் பயணித்த ஏரோ ப்ளோட் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், டில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு பாங்காக் விமான நிலையத்திலிருந்து இன்று (மே 6) 425 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்திய வான்வெளி வழியாக மாஸ்கோ சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் அந்த விமானத்தின் உள்ளே திடீரென தீப்பற்றியது.
இதனை அறிந்த விமானி உடனடியாக, டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டில்லி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் இருந்த 425 பயணிகளும், விமான பணியாளர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். விமானத்தில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.