சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர்: லோக்சபாவில் நாளை சிறப்பு விவாதம்
சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர்: லோக்சபாவில் நாளை சிறப்பு விவாதம்
ADDED : ஆக 17, 2025 06:29 PM

புதுடில்லி: சர்வதேச விண்வெளி மையத்துக்கு முதல் இந்தியர் சென்றது தொடர்பாக லோக்சபாவில் நாளை(ஆகஸ்ட் 18) சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் சுபான்ஷு சுக்லா. இவர், நாசா மற்றும் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனம் சார்பில் 'ஆக்சியம்- - 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, மேலும் மூன்று பேருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.கடந்த, ஜூன் 25ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட இவர்கள், சர்வதேச விண்வெளி மையத்தை மறுநாள் அடைந்தனர். கடந்த, ஜூலை 15ல் பூமிக்கு திரும்பினர்.சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது. அவர் இன்று காலை இந்தியா வந்தடைந்தார். சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுபான்ஷூ சுக்லா சென்றது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 2047 ல் வளர்ச்சியடைந்த இந்தியாவில் விண்வெளி திட்டங்களில் முக்கியமான ஒன்றான சர்வதேச விண்வெளி மையத்துக்கு முதல்முறையாக இந்தியர் சென்றது தொடர்பாக லோக்சபாவில் நாளை ( ஆக.,18) சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.