மைசூரு அரண்மனை புறாக்களுக்கு உணவளிப்பது இன்று முதல் நிறுத்தம்
மைசூரு அரண்மனை புறாக்களுக்கு உணவளிப்பது இன்று முதல் நிறுத்தம்
ADDED : செப் 22, 2024 11:20 PM

மைசூரு: மைசூரு அரண்மனை முன் இனி புறாக்களுக்கு உணவு அளிக்கப்படாது என 'கபுதார் தன் ஜெயின் சங்கம்' உறுதி அளித்துள்ளது.
மைசூரு நகரின் கபுதார் தன் ஜெயின் சங்கம் சார்பில், 2015ம் ஆண்டு, மைசூரு அரண்மனையின் கோட்டே ஆஞ்சநேயா கோவில் அருகில், தினமும் புறாக்களுக்கு உணவு அளித்து வருகின்றனர்.
உணவு தேடி வரும் நுாற்றுக்கணக்கான புறாக்கள், சாப்பிட்டு விட்டு அங்குள்ள மன்னர் சிலைகள், அரண்மனைகளில் அமர்ந்து 'எச்சம்' போட்டு விடுகின்றன.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் உட்பட பலர் பா.ஜ., - எம்.பி., யதுவீரிடம் முறையிட்டனர். அவரும் இது தொடர்பாக ஆலோசிக்க நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், டாக்டர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஜெயின் சங்கத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிபுணர் ரங்கராஜு: அரண்மனை முன், புறாக்களுக்கு உணவளிப்பதால், அவைகள் மன்னர்கள் சிலைகள், அரண்மனை வளாக சுவர்கள், கட்டடங்களில் அமர்ந்து எச்சம் இடுகின்றன.
இந்த எச்சத்தில் இருந்து வெளியேறும் யூரிக் அமிலம், பாரம்பரிய கட்டடங்களை சேதப்படுகின்றன. புறாக்கள் இயற்கையாகவே உணவுகளை தேடி, கண்டுபிடிக்கும் குணம் கொண்டவை. எனவே, திருமணம், பிறந்த நாள், போட்டோ ஷூட் என்ற பெயரில் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம்.
பா.ஜ., - எம்.பி., யதுவீர்: புறாக்களை 'வான் எலி' என்றும் அழைக்கின்றனர். எலிகள் போன்று புறாக்களும், தன்னிறைவு பெற்றவை. எனது தாயார் பிரமோதா தேவி கூட, புறாக்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து கூறி உள்ளார்.
காட்டுப் புறாக்களுக்கு நாம் உணவு அளிக்க தேவையில்லை. அதன் உணவை, அதுவே தேடிக் கொள்ளும். புறாக்களின் எச்சத்தில் இருந்து வெளியேறும் யூரிக் அமிலத்தால் பாரம்பரிய கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி, இத்தகைய புறாக்களால், குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படும். ஏற்கனவே சாமராஜ உடையார், அம்பேத்கர் சிலைகள் சேதமடைந்து உள்ளன. புறாக்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்.
பொது மக்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, புறாக்களுக்கு உணவளிப்பதை நிறுத்த வேண்டும்.
ஜெயின் சங்க பிரதிநிதி வினோத்: புறாக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைவரும் கூறி உள்ளனர். எனவே, இனி புறாக்களுக்கு உணவு வழங்க மாட்டோம். இனி யாருக்கும் எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.