இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 28 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 28 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
ADDED : ஜன 28, 2024 05:42 PM

ஐதராபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்துவரும் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் எடுத்து 190 ரன் முன்னிலை பெற்று ஆல்அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 3வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் போப் (148), ரேகன் அகமது (16) அவுட் ஆகாமல் இருந்தனர்.
4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரேகன் அகமது 28 ரன்னில் வெளியேறினார். டாம் ஹார்ட்லி (34) அஸ்வின் சுழலில் போல்டானார். மார்க் உட் (0) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடிய போப், இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 196 ரன்னில் பும்ரா வேகத்தில் போல்டானார். முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 420 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்., அஸ்வின் 3 விக்., ஜடேஜா 2 விக்., அக்சர் படேல் 1 விக்., வீழ்த்தினர்.
தோல்வி
இதனையடுத்து 230 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் (15), சுப்மன் கில் (0) விரைவில் வெளியேறினர். கேப்டன் ரோகித் சர்மா 39 ரன்னில் அவுட்டாக, இந்திய அணி வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். ராகுல் (22), ஸ்ரீகர் பரத் (28), ஜடேஜா (28) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 202 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் ஹார்ட்லி 7 விக்., வீழ்த்தினார்.

