டிராக்டர் மீது கார் மோதி விபத்து: ம.பி.,யில் ஐந்து பேர் உயிரிழப்பு
டிராக்டர் மீது கார் மோதி விபத்து: ம.பி.,யில் ஐந்து பேர் உயிரிழப்பு
ADDED : ஏப் 27, 2026 10:42 PM

போபால்:மத்திய பிரதேசத்தில் திருமண குழுவினர் சென்ற கார், சோயாபீன்ஸ் ஏற்றி சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் காயமடைந்தனர்.
மத்திய பிரதேசத்தின் நர்மதாபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிலர் திருமணத்துக்காக சேஹோர் மாவட்டம் புத்னி தாலுகாவில் உள்ள மானா கிராமத்துக்கு காரில் சென்றனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஏப்ரல் 27 அதிகாலை ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
நர்மதாபுரம் மாவட்டம் அஞ்சல்கேடா அருகேயுள்ள தவா ஆற்றுப்பாலம் மீது சென்ற கார் எதிரே சோயாபீன்ஸ் ஏற்றி வந்த டிராக்டர் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் சஹில் யாதவ், 19, ஹரி சிங் யாதவ், 57, வினீத் யாதவ், 22, சுபம் மொரப்பா, 18, சந்தோஷ் பிரஜாபதி ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; ஏழு பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மகான்நகர் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
