ADDED : மே 16, 2025 11:58 PM
இம்பால்: மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த ஐந்து தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023ல் மெய்டி - கூகி பழங்குடியினர் இடையே நடந்த மோதலை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 260 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் அமைதி சீர்குலைந்ததால் பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் பைரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து கடந்த பிப்., 13ல் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
இந்நிலையில், தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த இரு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் ஆன்ட்ரோ பார்க்கிங் பகுதியிலும் மற்றொருவர் குராய் கோன்சம் லேய்காய் பகுதியிலும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தீவிரவாதியை தவுபால் மாவட்டத்தில் கைது செய்தனர். அவர் மீது மிரட்டி பணம் பறித்ததாக வழக்கு உள்ளது.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் இருந்து கங்லே யவோல் கன்னா லுாப் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.
இதேபோல் தவுபால் மாவட்டத்தின் ஹெய்ரோக்கில் இருந்து தடை செய்யப்பட்ட காங்லீபாக் மக்கள் புரட்சிகர கட்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பல்வேறு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.