புதுச்சேரி முதல்வர் காரில் பறக்கும் படை சோதனை; பாதுகாப்பு அதிகாரிகள் வாக்குவாதம்
புதுச்சேரி முதல்வர் காரில் பறக்கும் படை சோதனை; பாதுகாப்பு அதிகாரிகள் வாக்குவாதம்
UPDATED : மார் 19, 2026 07:43 PM
ADDED : மார் 19, 2026 06:58 PM

விருதுநகர்: விருதுநகர் காரியாபட்டி அருகே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கார்களில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையிட்டனர்.
திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி ஆவியூர் போலீஸ் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 4 மணிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனம் செய்ய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆவியூர் சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி பெருமாள் மற்றும் அலுவலர்கள் அவரது காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரது பாதுகாப்புக்கு உடன் வந்த அதிகாரிகள் முதல்வர் காரை எப்படி சோதனை செய்யலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'அவர்களது பணியை செய்ய விடுங்கள்,' என முதல்வர் ரங்கசாமி கூறினார். இதையடுத்து, காரை முழுமையாக சோதனை செய்ததுடன், முதல்வரின் அடையாள அட்டை, சூட்கேஸ் மற்றும் பிற பொருட்களையும் சோதனையிட்டனர். சோதனையை சிறிது நேரத்தில் முடித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
அதேபோல, மதுரையிலிருந்து மல்லாங்கிணருக்கு வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு காரையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். தேர்தல் விதிமுறைகளை உறுதி செய்யும் வகையில் எந்த வாகனத்திற்கும், விதி விலக்கு இல்லாமல் சோதனை செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரியில், சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் தொடர்ந்து சலசலப்பு நீடித்து வருகிறது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, இன்று புதுச்சேரி வந்த பா.ஜ., மேலிட பொறுப்பாளரை சந்திக்க மறுத்து, என்.ஆர்.காங்., தலைவரான முதல்வர் ரங்கசாமி, திருச்செந்துார் புறப்பட்டு சென்றார். பாஜ குழுவினரை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

