ADDED : நவ 18, 2024 12:14 AM

திருவனந்தபுரம்: முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு ஜோதிட ஆலோசனைகள் வழங்கிய கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பூஞ்சார் மித்ரன் நம்பூதிரிபாட், 95, உடல்நலக் குறைவால் காலமானார்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், திரிபுனித்துராவை பூர்வீகமாக கொண்டவர் ஜோதிடர் பூஞ்சார் மித்ரன். வேதங்கள், இசை, நடனம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரிந்தவராக இருந்தார்.
இவரது ஜோதிட கணிப்புகள் துல்லியமாக இருந்ததால், அரசியல் தலைவர்கள் பலரும் இவரிடம் ஜோதிட ஆலோசனை பெற்று உள்ளனர்.
அந்த வகையில், முன்னாள் பிரதமர் இந்திரா மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு சில ஆண்டுகள் ஜோதிட ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் திரிபுனித்துரா அருகே உள்ள எரூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.