கர்நாடகாவில் போலீசார் இரண்டாம் நாளாக தடியடி காங்., பேனர்களை பா.ஜ., கிழித்ததால் பரபரப்பு
கர்நாடகாவில் போலீசார் இரண்டாம் நாளாக தடியடி காங்., பேனர்களை பா.ஜ., கிழித்ததால் பரபரப்பு
ADDED : ஜன 29, 2024 11:57 PM

பெங்களூரு: கர்நாடகாவில் ஹனுமன் உருவம் பொறிக்கப்பட்ட காவிக்கொடியை அகற்றியதை கண்டித்து, மாண்டியா கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றவர்கள் மீது, இரண்டாவது நாளாக நேற்றும் போலீசார் தடியடி நடத்தினர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மாண்டியா மாவட்டத்தில் உள்ளது கெரேகோடு கிராமம்.
இந்த கிராமத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தில், 108 அடி உயர கம்பம் அமைத்து தேசியக் கொடி ஏற்ற, ஒரு அமைப்பு சில தினங்களுக்கு முன், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி இருந்தது.
ஆனால், அங்கு தேசியக் கொடியை ஏற்றாமல், ஹனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
இதுபற்றி அறிந்த அரசு அதிகாரிகள், நேற்று முன்தினம் காலை கெரேகோடு கிராமத்திற்குச் சென்று, அந்த கொடியை அகற்றினர். அரசு உத்தரவின்படி தேசியக் கொடி ஏற்பட்டது. இதை கண்டித்து ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால், தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். கெரேகோடு கிராமத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
ஹனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி அகற்றப்பட்டதால், அரசை கண்டித்து, கெரேகோடு கிராமத்தில் இருந்து மாண்டியா கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஹிந்து அமைப்பினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் பா.ஜ., - ம.ஜ.த., கட்சியினரும் கலந்து கொண்டனர்.
மாண்டியா நகருக்குள் ஊர்வலம் வந்தபோது, ஊர்வலத்தில் ஈடுபட்ட சிலர், மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகாவின் புகைப்படத்துடன் இருந்த பேனர்களை கிழித்தனர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் புகைப்படத்துடன் இருந்த பேனர்கள் மீது கல் வீசி சேதப்படுத்தினர். பேனர்களை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், மாண்டியா கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் நகர்ந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகம் முன், தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
ஊர்வலம் வந்த ஹிந்து அமைப்பினர், தடுப்புகளை தள்ளிக் கொண்டு முன்நோக்கி செல்ல முயன்றனர். இதனால் மீண்டும் தடியடி நடத்தி, கூட்டத்தை போலீசார் கலைத்தனர். ஊர்வலமாக வந்தவர்களை குண்டு கட்டாக துாக்கி கைது செய்தனர்.
இந்த பிரச்னையால் மாண்டியா மாவட்டம் முழுதும், அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பெங்களூரிலும் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.