சிங்கத்தின் அருகே வனக்காவலர்; ரயில் பாதையை கடந்த வீடியோ வைரல்!
சிங்கத்தின் அருகே வனக்காவலர்; ரயில் பாதையை கடந்த வீடியோ வைரல்!
ADDED : ஜன 09, 2025 08:24 PM

புதுடில்லி: குஜராத் வனத்துறை காவலர் ஒருவர் ரயில் பாதையைக் கடக்கும் சிங்கத்தை பின் தொடர்ந்த வீடியோ வைரலாகியுள்ளது.
ஜனவரி 6ம் தேதி பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ காட்சியில், குஜராத் வனக்காவலர்ஒரு குச்சியுடன், ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்கிறார். அவருக்கு வெகு அருகில் ஒரு சிங்கம் ரயில் பாதையை கடந்து செல்கிறது. சிங்கம் அவரைப் பார்க்கிறது. அப்போதும் அவர், அச்சம் அடையாமல் தொடர்ந்து முன்னேறி செல்கிறார்.
காவலரிடமிருந்து சில மீட்டர் தொலைவில் இருந்த சிங்கம், அதன் வழியில் செல்வதற்கு முன் அவரை சில வினாடிகள் பார்த்தபடியே செல்கிறது.
ஆச்சரியப்படும் விதமாக, அந்த சிங்கம் ஆக்ரோஷம் அடையவில்லை. காவலரைத் தாக்கவும் முயற்சிக்கவில்லை. காவலர் அமைதியாக இருந்தார். மற்றொரு நபர் துாரத்திலிருந்து அந்த நிகழ்வை பதிவு செய்வது தெரிகிறது.
ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ஷம்புஜி கூறியதாவது: இந்த சம்பவம் ஜன.6ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பாவ்நகர் ரயில்வே பிரிவின் கீழ் உள்ள லில்யா ரயில் நிலையத்தின் கேட் எண் LC-31 இல் நடந்தது என்றார்.
இந்த சம்பவம் ஆன்லைனில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் வனத்துறை காவலரின் தைரியத்தையும் விழிப்புணர்வையும் பாராட்டுகின்றனர்.