பிரதமரின் ஆலோசனை குழுவில் முன்னாள் ஈ.டி., இயக்குநர்
பிரதமரின் ஆலோசனை குழுவில் முன்னாள் ஈ.டி., இயக்குநர்
ADDED : மார் 27, 2025 06:32 AM

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர உறுப்பினராக, அமலாக்கத் துறையின் முன்னாள் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா, 65, நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் பொருளாதார ஆலோசனைகளை வழங்கும் பணியை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு செய்து வருகிறது. இதன் தலைவராக பொருளாதார நிபுணர் சுமன் பெர்ரி உள்ளார்.
இதன் முழு நேர உறுப்பினராக இருந்த முன்னாள் தலைவர் பிபேக் ஓபராய், கடந்த ஆண்டு நவம்பரில் காலமானார். இதையடுத்து, அந்த பதவிக்கு அமலாக்கத் துறையின் இயக்குநராக பணியாற்றிய சஞ்சய் குமார் மிஸ்ரா நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023 செப்டம்பர் மாதம் வரை அமலாக்கத் துறை இயக்குநராக பணியாற்றியவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவரின் பதவிக் காலத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா, எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதான பண மோசடி வழக்குகளில் விசாரணை நடத்தினார். அமலாக்கத் துறையின் இயக்குநராக இருந்தபோது, அவரின் பதவியை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.