கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்
UPDATED : டிச 10, 2024 08:06 AM
ADDED : டிச 10, 2024 06:19 AM

பெங்களூரு: பெங்களூருக்கு 'ஐ.டி., நகரம்' என்று பெயர் வருவதற்கு காரணமான இருந்த, கர்நாடக முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர முன்னாள் கவர்னருமான எஸ்.எம்.கிருஷ்ணா, 92, உடல் நல குறைவால், பெங்களூருவில் இன்று(டிச.,10) அதிகாலை 2.45 மணியளவில் காலமானார்.
மாண்டியாவின் சோமனஹள்ளி கிராமத்தில், 1932 மே 1ல் பிறந்தார். மைசூரு ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலாவில் பள்ளி படிப்பை முடித்து, மஹாராஜா கல்லுாரியில் பி.ஏ., இளங்கலை பட்ட படிப்பு முடித்தார்.
பின், பெங்களூரு அரசு சட்ட கல்லுாரியில் சட்டபடிப்பு படித்தார். அமெரிக்காவில் மேற்படிப்பை படித்தார். அமெரிக்காவில் இருந்த போது, அவருக்கு தீவிர அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. அங்கு அவர் ஜான் எப் கென்னடியின் அதிபர் தேர்தலுக்காக பிரசாரம் செய்தார். கர்நாடகா திரும்பிய பின், 1962ல் மாண்டியாவின் மத்துார் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதாவது, அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரசின் சங்கர் கவுடாவுக்கு, அப்போதைய பிரதமர் நேரு பிரசாரம் மேற்கொண்டும், எஸ்.எம்.கிருஷ்ணா வெற்றி பெற்று, சட்டசபைக்குள் கால் பதித்தார்.
கர்நாடக சட்டசபை சபாநாயகராக 1989 முதல், 1993 வரையிலும்; வீரப்ப மொய்லி முதல்வராக இருந்த போது, 1993 முதல், 1994 வரை துணை முதல்வராகவும்; பதவி வகித்தார்.
பின், காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் 1999 அக்டோபர் 11ம் தேதி, கர்நாடகாவின் 10வது முதல்வராக பதவி ஏற்றார். இவரது ஆட்சி காலத்தில் தான், பெங்களூரு நகர வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தார்.
இதனால், பெங்களூரில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் துவங்கின. ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் அசுர வளர்ச்சி பெற்றது. மாநிலத்தின் பொருளாதாரம் உயர்ந்தது.
பல நாடுகளின் நிறுவனங்கள் ஒன்றன் பின், ஒன்றாக முதலீடு செய்தன. இதனால், சர்வதேச அளவில், பெங்களூரு நகருக்கு ஐ.டி., சிட்டி எனும், தகவல் தொழில்நுட்ப நகரமாக பெயர் வந்தது. அன்று முதல், இப்போது வரை அந்த பெயர் தக்க வைத்து கொள்கிறது.
1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார். 2004ல் மகாராஷ்டிரா கவர்னரானார். தீவிர அரசியலுக்கு திரும்பும் நோக்கத்தில், மார்ச் 5, 2008 அன்று அவர் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். மார்ச் 22, 2009 முதல், மன்மோகன்சிங் ஆட்சியில், மத்திய வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றினார்.
அதன் பின், அவருக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் தரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்து, 2017ல் பா.ஜ.,வில் இணைந்தார். கர்நாடக வளர்ச்சிக்கு அவரது ஆட்சி காலத்தில் பல முக்கிய திட்டங்களை தீட்டியது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.கிருஷ்ணா, சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல், பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். இதற்கிடையில், பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 2:45 மணியளவில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அவரது உடல் இன்று மத்தூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

