ADDED : ஏப் 20, 2025 01:26 AM

ராம்நகர்: கர்நாடகாவை சேர்ந்த நிழல் உலக தாதாவான மறைந்த முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராய் பயணம் செய்த கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தட்சிண கன்னடாவின் புத்துாரைச் சேர்ந்தவர் முத்தப்பா ராய். 1980களில் பிரபல நிழல் உலக தாதாவாக வலம் வந்தார்.
முத்தப்பா ராயின் முதல் மனைவி ரேகா ராய், 2013ல் உடல்நலக்குறைவால் இறந்தார். முத்தப்பா - ரேகா தம்பதிக்கு ரிக்கி ராய், ராக்கி ராய் என இரு மகன்கள்.
முதல் மனைவி இறந்த பின் 2016ல், அனுராதா என்பவரை முத்தப்பா திருமணம் செய்தார். 2020ம் ஆண்டு மே 15ம் முத்தப்பா ராயும் இறந்தார். அதன் பின் அவரது மகன்கள் ரிக்கி, ராக்கி வெளிநாடுகளுக்கு சென்றனர்.
ரிக்கி ரஷ்யா சென்று அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
ரஷ்யாவில் இருந்தபடியே, பெங்களூரில் ரியல் எஸ்டேட் தொழிலை கவனித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவில் இருந்து பெங்களூரு வந்திருந்தார்.
ராம்நகர் பிடதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து காரில், ரிக்கி ராய் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு பெங்களூரு புறப்பட்டார். பாதுகாவலர் ராஜ்பால் என்பவரும் உடன் இருந்தார். காரை டிரைவர் பசவராஜ் ஓட்டினார்.
வீட்டின் அருகே வைத்து கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டனர்.
ஒரு குண்டு காரின் சீட்டையும், இன்னொரு குண்டு காரின் கதவையும் துளைத்தது.
சுதாரித்துக் கொண்ட டிரைவர் பசவராஜ், காரை வேகமாக திருப்பியதில் கதவில் மோதி ரிக்கி ராயின், மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவரது இடது கை பகுதியிலும் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட, பண்ணை வீட்டின் ஊழியர்கள் வெளியே வந்து, காருக்குள் இருந்த ரிக்கி ராயை மீட்டு சிகிச்சைக்காக, பிடதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைக்காக பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார் டிரைவர் பசவராஜும் காயம் அடைந்தார்.
டிரைவர் கொடுத்த புகாரின் பேரில், முத்தப்பா ராயின் 2வது மனைவி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. சொத்து தகராறில் ரிக்கியை கொல்ல முயற்சி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.