மாணவனை கத்தியால் குத்திய நான்கு சிறுவர்கள் சிக்கினர்
மாணவனை கத்தியால் குத்திய நான்கு சிறுவர்கள் சிக்கினர்
ADDED : பிப் 03, 2026 01:39 AM
புதுடில்லி: படேல் நகரில் பள்ளி மாணவனை கத்தியால் குத்திய, நான்கு சிறுவர்கள் கைது செய்யப் பட்டனர்.
புதுடில்லி படேல் நகர் தயானந்த் மாடல் பொதுப் பள்ளி அருகே, ஜன., 28ம் தேதி மதியம் 2:00 மணிக்கு தன் தந்தையின் வேனில் 16 வயது சிறுவன் அமர்ந்து இருந்தான். அவனது தந்தை, பள்ளியில் இருந்து மேலும் சில மாணவர்களை அழைத்து வர சென்றிருந்தார். அப்போது, அங்கு வந்த நான்கு சிறுவர்கள், வேன் கண்ணாடியை உடைத்து, வேனுக்குள் இருந்த மாணவனிடம் வாக்குவாதம் செய்தனர்.
இருதரப்பினருக்கும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. எனவே, வேனில் இருந்த சிறுவன் இறங்கி ஓடினான். விரட்டி வந்த நான்கு சிறுவர்களும் மாணவனை மடக்கிப் பிடித்தனர். இருவர் அவனைப் பிடித்துக் கொள்ள மற்ற இருவர் கத்தியால் மாணவனை கத்தியால் சரமாரியாகக் குத்தினர். ரத்த வெள்ளத்தில் மாணவன் சரிந்ததும் தப்பி ஓடினர்.
மாணவனின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றார். அங்கு, முதலுதவி செய்து, ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் மாணவன் அனுமதிக்கப் பட்டுள்ளான்.
இதுகுறித்து, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார்,, ஆனந்த் பர்வதம் ராம்ஜாஸ் பூங்காவில் பதுங்கி இருந்த நான்கு சிறுவர்களை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேரிடமும் விசாரணை நடக்கிறது.

