பிரபல தொழிலதிபரை ஏமாற்றி ரூ.7 கோடி பறித்த மோசடி கும்பல்
பிரபல தொழிலதிபரை ஏமாற்றி ரூ.7 கோடி பறித்த மோசடி கும்பல்
ADDED : அக் 01, 2024 01:19 AM

லுாதியானா, பஞ்சாபைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எஸ்.பி.ஓஸ்வாலை ஏமாற்றி, 7 கோடி ரூபாய் பறித்த மோசடி கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நாட்டில் ஜவுளி துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் ஒன்று வர்தமான் குழுமம். பஞ்சாபில் உள்ள லுாதியானாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த நிறுவனத்தின் தலைவராக ஸ்ரீ பால் ஓஸ்வால் உள்ளார்.
கோடீஸ்வரான இவருக்கு சமீபத்தில் மொபைல் போனில் அழைப்பு ஒன்று வந்தது. சி.பி.ஐ., அதிகாரிகளாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், எஸ்.பி.ஓஸ்வால் பெயரில் சர்வதேச அளவில் மோசடி நடந்துள்ளதாக கூறினர்; 'ஆன்லைன்' வாயிலாக அவரை கைது செய்ய உள்ளதாகவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கை ரத்து செய்வதாகக் கூறி, ஓஸ்வாலிடம் 7 கோடி ரூபாய் வரை அவர்கள் பணம் பறித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், பஞ்சாப் சைபர்கிரைம் போலீசில் புகாரளித்தார்.
விசாரணையில், ஒன்பது பேர் அடங்கிய கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அசாமின் குவஹாத்தியைச் சேர்ந்த அட்டானு சவுத்ரி, ஆனந்தகுமார் சவுத்ரி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 5.25 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. மோசடியில் ஈடுபட்டு தப்பியோடிய அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.