அறக்கட்டளைக்கு நிதி வழங்குவதாக பெண்ணிடம் ரூ.1.10 கோடி மோசடி
அறக்கட்டளைக்கு நிதி வழங்குவதாக பெண்ணிடம் ரூ.1.10 கோடி மோசடி
ADDED : ஜன 24, 2024 05:55 AM
மாண்டியா, : கல்வி அறக்கட்டளைக்கு நிதி வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் 1.10 கோடி ரூபாய் மோசடி செய்த வாலிபரை, போலீசார் தேடுகின்றனர்.
மாண்டியா மளவள்ளி சிம்ஷாபூரை சேர்ந்தவர் மேரி, 55. 'ஷாலோம்' என்ற பெயரில், கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார்.
நான்கு மாதங்களுக்கு முன்பு மேரியுடன், மொபைல் போனில் பேசிய ஒருவர், சூர்யா, 30 என்று, தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
“உங்கள் கல்வி அறக்கட்டளைக்கு 25 கோடி ரூபாய் வழங்குகிறேன். இதற்கு செலுத்த வேண்டிய, வரியாக 1.10 கோடி ரூபாய் தர வேண்டும்,” என, மேரியிடம், சூர்யா கூறியுள்ளார். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.
கடந்த 20ம் தேதி மேரியின் வீட்டிற்கு, சூர்யா வந்துள்ளார். ஒரு சூட்கேஸ் நிறைய பணம் எடுத்து வந்தவர், “இதில் 25 கோடி ரூபாய் பணம் உள்ளது,” என, கொடுத்துள்ளார். அதை வாங்கிக் கொண்ட மேரி, 1.10 கோடி ரூபாயை கொடுத்தார்.
பின்னர் மேரிக்கு, தான் கொண்டு வந்திருந்த குளிர்பானத்தை சூர்யா கொடுத்தார். அதை குடித்த மேரி மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது, சூர்யா அங்கு இல்லை. அவர் கொடுத்த பணம், கலர் ஜெராக்ஸ் என்பது தெரிந்தது.
இதுகுறித்து பெலக்வாடி போலீசில், நேற்று முன்தினம் புகார் செய்தார். தலைமறைவாக உள்ள சூர்யாவை, போலீசார் தேடுகின்றனர்.

