ADDED : டிச 29, 2024 06:51 AM
பெங்களூரு: 'பணமோசடி வழக்கில் கைது செய்வோம்' என்று மிரட்டி, பெங்களூரில் வசிக்கும் ஜப்பான் வாலிபரிடம் 35.49 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
கிழக்கு ஆசியாவின் ஜப்பானை சேர்ந்தவர் ஹிரோஷி சசாகி, 35. தொழில் விசாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரு வந்தார். பெல்லந்துாரில் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார்.
கடந்த 12ம் தேதி ஹிரோஷியிடம் மொபைல் போனில் பேசிய மர்ம நபர், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என்று கூறினார்.
'உங்கள் பெயரில் உள்ள 'சிம்' மை பயன்படுத்தி, பண மோசடி நடக்கிறது. உங்கள் நம்பரை பிளாக் செய்ய உள்ளேன்' என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். சிறிது நேரத்தில் பேசிய இன்னொரு மர்ம நபர், மும்பை சைபர் கிரைம் போலீஸ் என்று கூறினார்.
'பணமோசடி வழக்கில் இங்கு ஒருவரை கைது செய்து உள்ளோம். அவர் உங்கள் பெயரை கூறுகிறார். உங்களை கைது செய்ய உள்ளோம்' என்றார்.
பயந்து போன ஹிரோஷி, 'நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை விட்டுவிடுங்கள்' என்று கூறியுள்ளார். 'நான் கூறும் வங்கிக்கணக்கிற்கு உங்களிடம் உள்ள பணத்தை அனுப்பி வையுங்கள்.
விசாரணை முடிந்ததும் திருப்பி தருகிறோம்' என்று மர்ம நபர் கூறி உள்ளார்.
இதை நம்பிய ஹிரோஷியும் 12ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை 35.49 லட்சம் ரூபாய் அனுப்பினார். பின், மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தன்னை ஏமாற்றி பண மோசடி செய்ததை உணர்ந்த ஹிரோஷி, தென்கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.

