ADDED : மார் 20, 2025 04:12 AM

பெங்களூரு : ''மது குடிப்பவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் இரண்டு மது பாட்டில்கள் இலவசமாக வழங்க வேண்டும்,'' என, கர்நாடக சட்டசபையில் ம.ஜ.த., உறுப்பினர் கிருஷ்ணப்பா கோரிக்கை விடுத்தார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. தற்போது, சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
சபையில், மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர் கிருஷ்ணப்பா நேற்று பேசுகையில், ''காங்கிரஸ் அரசு, வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்தி பெண்களுக்கு மாதம், 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறது.
''சக்தி திட்டத்தின் கீழ், மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் வழங்குகிறது.
''எப்படி இருந்தாலும் வரி பணம் ஆண்களுடையது. இதனால், மது குடிப்பவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் இரண்டு மது பாட்டில்கள் இலவசமாக வழங்க வேண்டும். இதில் என்ன தவறு உள்ளது. எம்.எல்.ஏ.,க்களும் கூட மது அருந்துகின்றனர்,'' என்றார்.
இதற்கு, சட்டசபையில் இருந்த பெண் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'பொத்தாம் பொதுவாக எம்.எல்.ஏ.,க்கள் மது அருந்துகின்றனர் என்று கூறினால் எப்படி' என, தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர்.
கிருஷ்ணப்பாவுக்கு பதில் அளித்த மின் துறை அமைச்சர் ஜார்ஜ், ''நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வாருங்கள். அப்போது நீங்கள் கூறியதை அமல்படுத்துங்கள். குடிகாரர்களை குறைவாக குடிக்க வைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்,'' என்றார்.