மணிப்பூரில் மீண்டும் வன்முறை! கிராமத்தில் குண்டுவீசிய போராட்டக்காரர்கள்!
மணிப்பூரில் மீண்டும் வன்முறை! கிராமத்தில் குண்டுவீசிய போராட்டக்காரர்கள்!
ADDED : அக் 19, 2024 11:13 AM

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ள சம்பவம், அங்கு பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி பழங்குடி மற்றும் மெய்தி சமூகங்கள் இடையே பெரும் கலவரம் மூண்டது. ஓராண்டை கடந்தும் இந்த வன்முறைகள் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் அங்கு வன்முறை அரங்கேறி இருக்கிறது. ஜிர்பும் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏராளமான ஆயுதங்களுடன் இன்று (அக்.19) காலை உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் தாக்குதலை தொடங்கினர்.
தாக்குதலை அறிந்த பாதுகாப்பு படையினர் பதிலடி தர, அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இருதரப்புக்கும் பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. சண்டையில் எந்த தரப்புக்கும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுவதால் பாதுகாப்பு படையினர் அதிக எண்ணிக்கையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வன்முறை நிகழ்ந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.