விநாயகர் சிலைகளை நீர் தொட்டிகளில் தான் கரைக்கணும்: கோர்ட் உத்தரவு
விநாயகர் சிலைகளை நீர் தொட்டிகளில் தான் கரைக்கணும்: கோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 25, 2025 12:57 AM

மும்பை: மஹாராஷ்டிராவில், விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, '6 அடி உயரம் வரையிலான அனைத்து விநாயகர் சிலைகளும் நீர் தொட்டிகளில் தான் கரைக்கப்பட வேண்டும்' என, உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுதும் ஆக., 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முழுவீச் சில் நடந்து வருகிறது. குறிப்பாக மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா, தொடர்ந்து 10 நாட்கள் வரை கொண்டாடப்படும் என்பதால், பிரமாண்ட விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பாக முக்கிய உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.
அதன் விபரம்:
விநாயகர் சிலைகளை நீராதாரங்களில் கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதில் நீதிமன்றம் உறுதியுடன் உள்ளது.
எனவே, 6 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகளை கரைக்க நீர் தொட்டிகளை கட்டாயம் அமைக்க வேண்டும்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தவறாமல் உறுதிசெய்ய வேண்டும். இந்த உத்தரவு அடுத்த ஆண்டு மார்ச் வரை அமலில் இருக்கும்.
விநாயகர் சிலைகளை தயாரிக்க பயன்படும், 'பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ்' மூலப்பொருளை எந்த வகையில் மறுசுழற்சி செய்ய முடியும் என்பதை ஆராய, நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும்.
அந்த குழு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சிலைகளை எப்படி கரைக்க வேண்டும் என்ற அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.