அங்கன்வாடியில் சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளிக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்
அங்கன்வாடியில் சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளிக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்
ADDED : டிச 19, 2024 11:15 AM

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் அங்கன்வாடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள், அவனை போலீஸில் ஒப்படைத்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜெகநாத்பூரின் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஒன்றில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சிறுமி ஒருவர் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர், சிறுமியை மீட்டு, அங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக சம்பாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளியை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து, போலீஸில் ஒப்படைத்தனர்.
சிறுமியின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த சம்பா கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன்பு திரண்டனர். அப்போது, சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, மருத்துவமனையின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், பதற்றம் நிலவியது. மேலும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.