பி.டி.எஸ்., குழுவை சந்திக்க கடத்தல் நாடகமாடிய சிறுமியர்
பி.டி.எஸ்., குழுவை சந்திக்க கடத்தல் நாடகமாடிய சிறுமியர்
ADDED : டிச 31, 2024 02:42 AM

மும்பை, மஹாராஷ்டிராவில் தாராஷிவ் மாவட்டத்தின் ஓமேர்கா பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி மற்றும் 13 வயதான இரண்டு சிறுமியர் என மொத்தம் மூன்று சிறுமியர், அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்களை, பள்ளி வேனில் இருந்து கடந்த 27ம் தேதி மர்ம நபர்கள் கடத்தியதாக பெண் ஒருவர், போலீசாரின் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
இதையடுத்து, அழைப்பு விடுத்த மொபைல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர்; அது ஓமேர்காவில் இருந்து புனே நோக்கி செல்லும் அரசு பஸ்சில் இருந்து சிக்னல் காட்டியது.
இதையடுத்து, சோலாப்பூர் மாவட்டத்தின் மோஹல் பகுதியில் சென்ற அந்த பஸ்சை, போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் இருந்த மூன்று சிறுமியரையும், போலீசார் பத்திரமாக மீட்டனர்.
அதன்பின் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவைச் சேர்ந்த பி.டி.எஸ்., எனும் பிரபல பாப் இசைக்குழுவினரை காண அச்சிறுமியர் முடிவு செய்தது தெரியவந்தது.
இதற்காக, புனே நகருக்கு சென்று பணத்தை திரட்ட மூவரும் முடிவு செய்த நிலையில், தங்களை மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக நம்பவைத்து பெற்றோரிடம் இருந்து பணத்தைப் பெற்று தென் கொரியாவுக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக, பஸ்சில் உள்ள ஒரு பெண்ணின் உதவியை நாடி, தங்களை மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக நாடகமாடி நம்பவைத்தனர்.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த சிறுமியரின் பெற்றோரிடம், மூவரையும் ஒப்படைத்த போலீசார், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி, அவர்களை அனுப்பி வைத்தனர்.