உலகளாவிய திருவிழா! பொங்கல் பண்டிகை குறித்து பிரதமர் பெருமிதம்: டில்லியில் அமைச்சர் முருகன் வீட்டில் கொண்டாட்டம்
உலகளாவிய திருவிழா! பொங்கல் பண்டிகை குறித்து பிரதமர் பெருமிதம்: டில்லியில் அமைச்சர் முருகன் வீட்டில் கொண்டாட்டம்
UPDATED : ஜன 15, 2026 04:05 AM
ADDED : ஜன 15, 2026 01:10 AM

டில்லியில் உள்ள பா.ஜ.,வை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் நேற்று நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார். ''இயற்கையுடன் இணக்கமான சமநிலையைப் பேண வேண்டும் என்ற செய்தியை வழங்கும் பொங்கல் திருவிழா, உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் போற்றப்படும் ஒரு உலகளாவிய திருவிழாவாக உருவெடுத்துள்ளது,'' என, புகழாரம் சூட்டினார்.
தமிழர் திருவிழாவான பொங்கல், உலகம் முழுதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை இணைஅமைச்சர் எல்.முருகனின் டில்லி வீட்டில், நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
'ஒரே பாரதம்; உன்னத பாரதம் என்ற கருப்பொருளில் நடந்த இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய சுரங்க அமைச்சர் கிஷண் ரெட்டி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராமமோகன் நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சூரியனுக்கும் நன்றி
விழாவில், தமிழ் பாரம்பரிய முறைப்படி, பிரதமர் முன்னிலையில் பொங்கலிடப்பட்டது. பிரதமரே பால், நெய் உள்ளிட்டவற்றை ஊற்றி, பொங்கல் பானைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.
அதோடு, அங்கிருந்த மாடுகளுக்கு பொன்னாடை அணிவித்து, பழங்கள் அடங்கிய உணவு தந்து வணங்கினார்.
விழாவில், 'வணக்கம், அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்' என, தமிழில் தன் உரையை துவங்கிய பிரதமர் மோடி பேசியதாவது:
விவசாயிகளின் கடின உழைப்பை கொண்டாடும் பொங்கல் திருவிழா, நிலத்திற்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக உள்ளது.
நன்றி என்பது வெறும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு, நம் அன்றாட வாழ்வின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாற வேண்டும் என்பதை, பொங்கல் திருவிழா நமக்கு நினைவூட்டுகிறது.
தமிழ் கலாசாரம் தமிழகத்துக்கு மட்டும் உரியதல்ல. இது, நம் தேசத்தின் பகிரப்பட்ட பாரம்பரியம்; முழு மனிதகுலத்திற்கு பகிரப்பட்ட பாரம்பரியம். தமிழ் கலாசாரம் உலகின் பழமையான வாழும் நாகரிகங்களில் ஒன்று. இது, பல நுாற்றாண்டு கால ஞானத்தையும், பாரம்பரியத்தையும் உள்ளடக்கியது.
அவை, வரலாற்றில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு எதிர்காலத்திற்கு வழிகாட்டுகின்றன. ஒரே பாரதம்; உன்னத பாரதம் என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தக் கூடியதாக பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் உள்ளன.
பொங்கல் இன்று உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது. உலகம் முழுதும் உள்ள தமிழ் சமூகத்தினரும், தமிழ் கலாசாரத்தை போற்றுபவர்களும் பொங்கல் திருவிழாவை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். அவர்களில் ஒருவராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
இயற்கை, குடும்பம் மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு இடையே இணக்கமான சமநிலையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை பொங்கல் திருவிழா வலியுறுத்துகிறது.
நம் பூமி, நமக்கு பல விஷயங்களை தருகிறது. அதை போற்றிப் பாதுகாப்பது நம் பொறுப்பு. மண் வளத்தை பேணுதல், நீரை சேமித்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான வளங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துதல் மிகவும் அவசியம்.
இன்றைய இந்தியா முன்னேறிச் செல்லும்போது, அதன் கலாசார வேர்களில் இருந்து வலிமையை நம் தேசம் பெறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
விவசாயிகளின் நலன்
விவசாயத்துக்கும், தமிழர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை, திருக்குறளில் காண முடியும். மத்திய அரசும்கூட, விவசாயிகளின் நலன்களுக்காகவே, தீவிர மாக பணியாற்றி வருகிறது.
அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், அதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தொடர்ச்சியாக முக்கிய நலத்திட்டங்கள் வாயிலாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடனும் செயலாற்றி வருகிறது.
இந்த சூழலில், தமிழக மக்களுடன் இணைந்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில், மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களின் இத்தகைய மிகப்பெரிய நேசத்தை நான் சம்பாதித்துள்ளதை மிகுந்த பாக்கியமாகவும் கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
- நமது டில்லி நிருபர் -

