கோவாவின் புதிய கவர்னரான இளவரசர்: எளிமையே இவரது அடையாளம்!
கோவாவின் புதிய கவர்னரான இளவரசர்: எளிமையே இவரது அடையாளம்!
UPDATED : ஜூலை 17, 2025 07:26 AM
ADDED : ஜூலை 17, 2025 06:31 AM

லடாக், கோவா, ஹரியானாவுக்கு புதிய கவர்னர்களை நியமித்து, சமீபத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இதில், ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கஜபதி ராஜு, கோவா கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
விஜயநகர பேரரசர் குடும்பத்தைச் சேர்ந்த இவர், எந்த ஆடம்பரமும் இல்லாமல், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது தந்தை பி.வி.ஜி.ராஜு, தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவில்களுக்கு நன்கொடையாக அளித்தவர்.
அரசு பஸ்சில் பயணம்
விஜயநகரத்தில், 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்லுாரி கூட இல்லாத காலத்தில், மஹாராஜா கல்லுாரியை அவர் நிறுவினார். 1978 முதல் ஆறு முறை எம்.எல்.ஏ.,வான அசோக் கஜபதி ராஜு, மறைந்த பிரபல நடிகர் என்.டி.ராமா ராவ், 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை துவங்கிய பின், அதில் சேர்ந்தார்.
ராமா ராவ் அமைச்சரவையில் கலால், நிதி, வருவாய் போன்ற துறைகளை அவர் கவனித்தார். தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 40 ஆண்டுகளுக்கும் மேல் தெலுங்கு தேசத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
ஆந்திராவில் அமைச்சராக பணியாற்றிய போது, அசோக் கஜபதி ராஜுவின் அலுவலகம் எப்போதும் வெறிச்சோடியே காணப்படும். இடைத்தரகர்களை அவர் அனுமதிக்காததே இதற்கு காரணம். மேலும், தன் அலுவலக வாயிலில், 'அரசு பணி தவிர, மற்றவற்றுக்கு அனுமதி இல்லை' என்ற பலகையும் அவர் வைத்திருந்தார். அந்தளவுக்கு நேர்மையை கடைப்பிடிப்பவர்.
அமைச்சராக இருந்த போது, அசோக் கஜபதி ராஜுவின் மகள் ஹைதராபாதுக்கு வெளியே மருத்துவம் படித்தார். கல்லுாரிக்கு தினமும் அரசு பஸ்சில் சென்று வந்தார்.
சலுகை வேண்டாம்
இந்த தகவல் முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு தெரிய வர, அவரை ஹைதராபாதில் உள்ள கல்லுாரிக்கு மாற்ற உத்தரவிட்டார். இதையறிந்த அசோக் கஜபதி ராஜு, 'என் மகள் ஹைதராபாத் வெளியே உள்ள கல்லுாரியிலேயே படிக்கட்டும். எந்த சலுகையும் வேண்டாம்' என கூறிவிட்டார்.
கடந்த 2014 - 19 வரை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், விமான போக்குவரத்து துறை அமைச்சராக அசோக் கஜபதி ராஜு பதவி வகித்தார். அந்த கால கட்டத்தில், அமைச்சருக்குரிய எந்த சிறப்பு சலுகையும் அவர் பயன்படுத்தியதில்லை. இதை பிரதமர் மோடியே பல முறை அமைச்சரவைக் கூட்டங்களில் கூறி, அவரை பாராட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன.
அரிது
ரயில் அல்லது விமான பயணமாக இருந்தாலும், உதவியாளர்கள் இன்றி தன் உடைமைகளை அவரே எடுத்துச் செல்வார். ரயில் நிலையங்களில் சாதாரண நபர் போல, பயணியருக்கான இருக்கையில் அமர்ந்திருப்பார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அசோக் கஜபதி ராஜுவை கவர்னராக நியமிக்கும்படி, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு பரிந்துரைத்தார். இந்த காத்திருப்பு, ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது.
கோவா கவர்னராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிச்சயமாக, அசோக் கஜபதி ராஜு ஒரு தனித்துவமான ஆளுமை. நம் நாட்டுக்கு இவரை போன்ற தலைவர்கள் கிடைப்பது அரிது.
- நமது சிறப்பு நிருபர் -