நல்லவர் மனதில் தெய்வம் குடியிருக்கும்; சொந்த ஊருக்கு ரூ.100 கோடி நிதியுதவி கொடுத்த தொழிலதிபர்!
நல்லவர் மனதில் தெய்வம் குடியிருக்கும்; சொந்த ஊருக்கு ரூ.100 கோடி நிதியுதவி கொடுத்த தொழிலதிபர்!
ADDED : நவ 09, 2024 10:11 AM

ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்குவதற்காக, தொழிலதிபர் மகேந்திரா மேக் படேல் ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் நிஸ்ரயா கிராமத்தில் பிறந்தவர் மகேந்திரா மேக் படேல். இவருக்கு வயது 86. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் அமெரிக்காவில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது சொந்த கிராமத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என விரும்பி அதற்காக ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
நிஸ்ரயா கிராமத்தில்,அதிநவீன உயர்நிலைப் பள்ளியைக் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி, இந்த பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என மேக் படேல் விரும்புகிறார். தற்போது கன்சல்ட் ஆண்ட்ஸ் கார்ப்பரேஷனின் தலைவராக பணியாற்றி வரும் இவர் கூறுகையில், 'நான் இந்தியன் வங்கியில் 75 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்து இருந்தேன். தற்போது அந்த பணத்தை நிஸ்ரயா கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்' என்றார்
மேலும், அவர் கூறுகையில், 'நிஸ்ரயா கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லை. குழந்தைகள் மற்ற கிராமங்கள் அல்லது நகரங்களுக்குச் செல்ல வேண்டும். குழந்தைகள் அனைவரும் உயர்கல்வி பெற பள்ளி கட்டி கொடுப்பது எனது கனவு. மாணவர்கள் இலவசமாக கல்வி கற்க வேண்டும் என்றார்.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும், நிஸ்ரயா கிராமத்தை சேர்ந்த 70 ஏழை மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் வழங்கினார். அவர்களின் உயர்கல்வி பி.ஏ., பிகாம் மற்றும் பிசிஏ என பட்டப்படிப்புகளுக்கு மேக் படேல் உதவினார். தொடர்ந்து அவர் செய்த உதவிகளால், அந்த கிராமம் நல்ல வடிகால் அமைப்பு, சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் என வளர்ச்சி அடைந்துள்ளது.
மேக் படேலுக்கு கிராம மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. இவரை அந்த கிராம மக்கள் கடவுள் போல் பார்க்கிறார்கள். உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் தன் சொந்த கிராமத்தை மறவாமல், ரூ.100 கோடி நிதியுதவி அளித்த மேக் படேலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.