கோத்ரா கலவர வழக்கு 19 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் விடுதலை
கோத்ரா கலவர வழக்கு 19 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் விடுதலை
ADDED : ஜூலை 30, 2025 02:52 AM

ஆமதாபாத் : குஜ ராத்தில், கோத்ரா கலவரத்துக்கு பிந்தைய வன்முறை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மூன்று பேரை, ஆதாரங்கள் இல்லாததால், 19 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் கோத்ராவில், 2002 பிப்., 27-ல், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப் பட்டதில், 59 பேர் உயிரிழந்தனர். அதன்பின், மாநிலம் முழுதும் கலவரம் வெடித்தது.
ஆனந்த் மாவட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில், சச்சின் படேல், அசோக் படேல், அசோக் குப்தா உள்ளிட்ட நான்கு பேருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, 2006 மே 29ல், அம்மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, நான்கு பேரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதற்கிடையே, 2009ல் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி கீதா கோபி தலைமையிலான அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு:
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள சச்சின் படேல், அசோக் படேல், அசோக் குப்தா ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே மூன்று பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.