ADDED : பிப் 04, 2025 06:44 AM

உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணாவின் குட்லே கடற்கரை அருகில் அமைந்து உள்ளது 'சிவன் குகை கோவில்'. இங்கு இத்தகைய கோவில் இருப்பது பெரும்பாலான சுற்றுலா பயணியருக்கு தெரிவதில்லை.
கடற்கரையில் இருந்து பார்க்கும் போது, குகை போன்று தெரியுமே தவிர, அது கோவில் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புராணங்களின்படி, ராவணன் கடும் தவம் புரிந்தார். அவரின் தவத்தை மெச்சிய சிவன், என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு ராவணன், தனக்கு 'ஆத்ம லிங்கம்' வேண்டும் என்று கேட்டார். இதை ஏற்ற சிவனும், 'ஆத்ம லிங்கத்தை' வழங்கினார்.
அதேவேளையில், 'இந்த லிங்கத்தை, உன் இடத்துக்கு செல்லும் வரை கீழே வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால், அங்கேயே நான் ஸ்தாபிப்பேன்' என்று கூறி எச்சரித்தார்.இதை ஏற்றுக் கொண்ட ராவணன், இலங்கைக்கு திரும்பி கொண்டிருந்தார்.கோகர்ணா வந்தபோது, விஷ்ணு பகவான், சூரியனை மறைத்தார்.
மிகவும் சிவ பக்தரான ராவணன், மாலை நேரத்தில் சிவனுக்கு பூஜை செய்வார். சிவலிங்கத்தை கீழே வைக்க கூடாது என்பதால், அவ்வழியாக யாராவது வருகின்றனரா என எதிர்பார்த்திருந்தார்.
அப்போது, விநாயகர், பிராமண சிறுவன் வேடத்தில் அவ்வழியாக வந்தார். அவரை நிறுத்திய ராவணன், ஆத்மலிங்கத்தை அவரிடம் கொடுத்து, 'தான் பூஜையை முடிக்கும் வரை கையில் வைத்திரு. கீழே வைக்க வேண்டாம்' என்று கூறியிருந்தார்.
ஆனால், விநாயகர் பதிலுக்கு ஒரு நிபந்தனை விதித்தார். 'என்னால் முடிந்த வரை லிங்கத்தை கையில் பிடித்திருக்கிறேன். பிடிக்க முடியவில்லை என்றால், உங்களை மூன்று முறை அழைப்பேன்.
அதற்குள் வந்து லிங்கத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கீழே வைத்துவிடுவேன்' என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட ராவணனும், பூஜையில் அமர்ந்து கொண்டார். இதை எதிர்பார்த்த விநாயகர் மூன்று முறை ராவணனை அழைத்தார். அவர் வராததால், ஆத்மலிங்கத்தை அங்கேயே வைத்துவிட்டு, மறைந்து விட்டார்.
பூஜை முடிந்து வந்த ராவணன், லிங்கம் தரையில் இருப்பதை பார்த்த அதிர்ச்சியடைந்தார். லிங்கத்தை துாக்க பலமுறை முயற்சித்தும் முடியவில்லை.
இதனால் லிங்கம் பசுவின் காதுபோன்று மாறியது. அதனாலேயே, 'கோ' என்றால் பசு, 'கர்ணா' என்றால் காது என்று 'கோகர்ணா' என்று மாறியது.
- நமது நிருபர் -

