சி.எஸ்.கே., ரசிகர்களுக்கு குட்நியூஸ்; 2025 ஐபிஎல்லில் களமிறங்கும் தோனி!!
சி.எஸ்.கே., ரசிகர்களுக்கு குட்நியூஸ்; 2025 ஐபிஎல்லில் களமிறங்கும் தோனி!!
UPDATED : அக் 26, 2024 09:36 PM
ADDED : அக் 26, 2024 09:31 PM

சென்னை: 2025ம் ஆண்டு நடக்கும் ஐ.பி.எல்., தொடரில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
2025ம் ஆண்டு ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம். தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வரும் 31ம் தேதிக்குள் வெளியிட ஐ.பி.எல்., அணிகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கான பணிகளில் அனைத்து அணி நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன.
சென்னை அணியை பொறுத்தவரையில் யார் யார் தக்க வைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அதேபோல, ஓய்வு முடிவை அறிவிக்க தயாராகியுள்ள தோனி, 2025 ஐ.பி.எல்., தொடரில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். அடுத்த ஐ.பி.எல்., தொடரில் தோனி விளையாடுவது குறித்து எந்த தகவல் அளிக்காத நிலையில், வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் அவரை சந்தித்து பேச சி.எஸ்.கே., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், சென்னை அணி தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இதன்மூலம், 2025 ஐ.பி.எல்., தொடரில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. அதாவது, ஜடேஜா, ருதுராஜ் கெயிக்வாட், பதிரானா ஆகிய வரிசைகளில் 3 வீரர்களை தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தோனியை அன்கேப்டு ரீடெயின் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம், தோனி 2025 ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.