கேரளாவில் கோர விபத்து; தமிழர்கள் 5 பேர் பரிதாப பலி!
கேரளாவில் கோர விபத்து; தமிழர்கள் 5 பேர் பரிதாப பலி!
ADDED : நவ 26, 2024 07:59 AM

திருவனந்தபுரம்: திருச்சூரில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட தமிழர்கள் மீது லாரி ஏறியதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் திரப்பரையார் பகுதியில் சாலையோரம் தமிழர்கள் சிலர் கூடாரம் அமைத்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மரக்கட்டைகள் ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைதடுப்பில் மோதியது. அதே வேகத்தில் அங்கு சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும் ஏறியது.
இந்த விபத்தில் அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை உள்பட தமிழர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தையடுத்து, அவர்களை மீட்ட அங்குள்ளோர், திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று தெரிகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரி ஓட்டுநர் அசந்து தூங்கியதால் விபத்து நேரிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஓட்டுநர் அலெக்ஸ், அவருடன் இருந்த க்ளீனர் ஜோஸ் இருவரையும் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், பலியானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
காளியப்பன்(50), ஜீவன் (4), நாகம்மா(39), பங்காசி(20) மற்றும் 2 வயது குழந்தை. இவர்களில் குழந்தையும் பெயர் விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.