மனிதாபிமானத்திற்காக அரசு வளைந்து கொடுக்கலாம்: குடியுரிமை தொடர்பான வழக்கில் கோர்ட் கருத்து
மனிதாபிமானத்திற்காக அரசு வளைந்து கொடுக்கலாம்: குடியுரிமை தொடர்பான வழக்கில் கோர்ட் கருத்து
ADDED : டிச 04, 2025 12:16 AM

புதுடில்லி: 'வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணியை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும். மனிதாபிமானத்திற்காக மத்திய அரசு சற்று வளைந்து கொடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நம் நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வரும் வங்கதேசத்தினர், மியான்மரை சேர்ந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் ஆகியோரை மீண்டும் அவர்களது தாய்நாட்டிற்கே அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கி இருக்கின்றன.
மேற்கு வங்கத்தை சேர்ந்த போடு ஷேக் என்பவருக்கு, சோனாலி கதுன் என்ற மகள் இருக்கிறார். டேனிஷ் ஷேக் என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது. சோனாலிக்கு 8 வயதில் மகனும், தற்போது நிறைமாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார்.
சட்ட விரோதம்
இந்நிலையில், டேனிஷ் ஷேக் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதால், அவரையும், அவரது மனைவி சோனாலியையும் இந்த ஆண்டு துவக்கத்தில், அந்நாட்டுக்கு நம் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதேபோல், மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்வீட்டி பிபி என்பவரது கணவர் அமீர் கானும் வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த சோனாலியின் தந்தையான போடு ஷேக் மற்றும் அமீர் கானின் மனைவி ஸ்வீட்டி பிபி தரப்பில் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
கடந்த செப்., 26ம் தேதி, இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், போடு ஷேக் இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை உறுதி செய்தது. எனவே, அவரது மகள் சோனாலியும் இந்தியர் என்பதால், நாடு கடத்தப்பட்டது சட்டவிரோதமானது என தீர்ப்பளித்தது.
அத்துடன் ஒரு வாரத்திற்குள் சோனாலி உள்பட நாடு கடத்தப்பட்ட ஏழு பேரையும் மீண்டும் மேற்கு வங்கம் அழைத்து வர வேண்டும் என அறிவுறுத்தியது. கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேகம்
இம்மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில், கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ''நாடு கடத்தப்பட்டவர்களை மீண்டும் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என வாதாடினார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ''அவர்கள் அனைவரும் வங்கதேசத்தினர், அவர்களது குடியுரிமை விவகாரத்தில் மத்திய அரசுக்கு வலுவான சந்தேகம் இருக்கிறது,'' என கூறினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட பின், தலைமை நீதிபதி சூர்ய காந்த் நேற்று பிறப்பித்த உத்தரவு:
மத்திய அரசு சில நேரங்களில் மனிதாபிமானத்திற்காக வளைந்து கொடுக்கலாம். அதில் தவறு இல்லை. போடு ஷேக்கின் குடியுரிமை கேள்விக்குறியாக இல்லை. எனவே, அவரது மகளும், பேரனும் இந்தியர்கள் தான்.
மருத்துவ செலவு
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவரது மகளின் நலனுக்காக விட்டுத் தரலாம். உடனடியாக போடு ஷேக்கின் மகளையும், அவரது குடும்பத்தையும் நம் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். போடு ஷேக்கின் மகளுக்கு தேவையான மருத்துவ செலவுகளையும் ஏற்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி சூர்ய காந்த் உத்தரவிட்டார்.

