காஸ் சிலிண்டர்- பயோமெட்ரிக் ஆதார் சரி பார்ப்பு கட்டாயமில்லை; அறிவித்தது மத்திய அரசு
காஸ் சிலிண்டர்- பயோமெட்ரிக் ஆதார் சரி பார்ப்பு கட்டாயமில்லை; அறிவித்தது மத்திய அரசு
ADDED : மார் 17, 2026 03:48 PM

புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் தொடர்பாக பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு என்பது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மார்ச் 15ம் தேதி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர், தொடர்ந்து சிலிண்டர்களை பெற பயோமெட்ரிக் முறையில் ஆதார் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு இருப்பதால் நுகர்வோர் அனைவரும் கட்டாயம் பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இதற்கு விளக்கம் அளித்து உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
ஆன்லைன் கேஓய்சி முறை என்பது புதிய நடைமுறை கிடையாது. நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் பயோ மெட்ரிக் ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்பதற்காகவே தெரிவிக்கப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பானது அனைத்து நுகர்வோர்களுக்கும் கட்டாயமல்ல.
மேற்கண்ட சரிபார்ப்பு விவரங்களை இதுவரை ஒருமுறை கூற சரிபார்க்காதவர்கள் மட்டுமே இதை பின்பற்றினால் போதுமானது. ஏற்கனவே சரிபார்த்தவர்கள் அதை மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் மட்டும் மானியம் பெற நிதியாண்டுக்கு ஒருமுறை இந்த சரிபார்ப்பை பின்பற்ற வேண்டும். அதிலும் 7 சிலிண்டர்களை பெற்ற பின்னர் 8வது அல்லது 9வது சிலிண்டரை பெறும் போது இந்த கட்டாய சரிபார்ப்பு அவசியம்.
இந்த சரிபார்ப்பு நடைமுறையை நுகர்வோர்கள் தங்களின் வீடுகளில் இருந்தே முற்றிலும் இலவசமாகவே செய்து கொள்ள முடியும். சிலிண்டர் வினியோகம் இதனால் பாதிக்கப்படாது. சமையல் காஸ் சிலிண்டரை முறைகேடாக பயன்படுத்துபவர்களையும், முறைகேடுகளை கண்டறியவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

