பார்லி., நிலைக்குழு பதவிக்காலத்தை 2 ஆண்டாக நீட்டிக்க அரசு பரிசீலனை
பார்லி., நிலைக்குழு பதவிக்காலத்தை 2 ஆண்டாக நீட்டிக்க அரசு பரிசீலனை
ADDED : செப் 28, 2025 06:50 AM

புதுடில்லி: பார்லிமென்ட் நிலைக்குழுக்களின் பதவிக்காலத்தை ஓராண்டில் இருந்து இரு ஆண்டுகளாக நீட்டிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதி, ராணுவம், வெளியுறவு, கல்வி, விவசாயம் என பல்வேறு துறை களுக்கான பார்லி., நிலைக் குழுக்கள் உள்ளன.
இந்த குழுக்களில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவைச் சேர்ந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பர்.
இந்த நிலைக்குழுக்கள், முன்மொழியப்பட்ட சட்டத்தை ஆய்வு செய்வதிலும், அரசு கொள்கைகளை மதிப்பாய்வு செய்வதிலும், பட்ஜெட் ஒதுக்கீடுகளை ஆராய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பார்லி., கூட்டத்தொடர் நடக்காத போது, இந்த நிலைக்குழுக்கள் பெரும்பாலும், 'மினி -பார்லிமென்ட்'டாக செயல் படுகின்றன.
பார்லி., நிலைக்குழுக்களின் பதவிக்காலம் ஓராண்டாக உள்ள நிலையில், அதை இரு ஆண்டு களாக அதிகரிக்கும்படி எம்.பி.,க்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போதைய நிலைக் குழுக்களின் பதவிக் காலம், விரைவில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், பார்லி., நிலைக்குழுக்களின் பதவிக்காலத்தை ஓராண்டில் இருந்து இரு ஆண்டு களாக நீட்டிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி நடந்தால், அது காங்., மூத்த தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூருக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை பாராட்டி பேசி வருவதால், அவர் மீது காங்., தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த சூழலில், நிலைக்குழுக்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டால், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு, வெளியுறவு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவராக சசி தரூர் செயல்பட முடியும்.