அரசு மருத்துவமனை அலட்சியம் பிளாஸ்டிக் பையில் குழந்தை உடல்
அரசு மருத்துவமனை அலட்சியம் பிளாஸ்டிக் பையில் குழந்தை உடல்
ADDED : ஜூன் 17, 2025 06:38 AM

நாசிக் : மஹாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் ஜோஹல்வாடி பகுதியை சேர்ந்த பழங்குடியினத்தவர் சாகாராம் காவர், 28. இவரது மனைவி அவிட்டா, 26. இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
நிறைமாத கர்ப்பிணியான மனைவி அவிட்டாவுக்கு கடந்த 11ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. சுகாதார மையம் அழைத்துச் சென்றார். அங்கு, கருவின் இதயத்துடிப்பை அறிய முடியாததால், நாசிக் மருத்துவமனைக்கு செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
ஆம்புலன்ஸ் கேட்டு கிடைக்காததால் தனியார் வாகனம் வாயிலாக நாசிக் மருத்துவமனையில், 12ம் தேதி அனுமதித்தார். அங்கு, இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது.
தன் குழந்தையின் உடலையும், மனைவியையும் அழைத்துச் செல்ல சாகாராம், ஆம்புலன்ஸ் கேட்டார். மருத்துவமனை நிர்வாகம் தர மறுத்தது.
இதனால், கடையில் 20 ரூபாய்க்கு பிளாஸ்டிக் பை வாங்கி, அதில் குழந்தையின் உடலை வைத்து அரசு பஸ்சில், 90 கி.மீ., எடுத்துச் சென்றார். தன் வீட்டின் அருகே உடலை புதைத்தார்.
இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், ஆம்புலன்ஸ் அளிக்க முன் வந்ததாகவும், சாகாராம் அதை மறுத்துவிட்டதாகவும் நாசிக் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.