மூணாறில் பயன்பாட்டுக்கு வரும் அரசு தங்கும் விடுதி
மூணாறில் பயன்பாட்டுக்கு வரும் அரசு தங்கும் விடுதி
ADDED : ஜன 03, 2025 06:31 AM

மூணாறு; மூணாறில் சுற்றுலாதுறை சார்பிலான தங்கும் விடுதி நாளை (ஜன.4) பயன்பாட்டுக்கு வருகிறது.
மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு வசதியாக அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் சுற்றுலா துறை சார்பில் தங்கும் விடுதி கட்ட முடிவு செய்து, அதன் பணிகள் 2014 ஜூலை 4ல் துவங்கியது.
அதில் ஒன்பது ஆடம்பர அறைகள், ஒரு வி.ஐ.பி. அறை, 80 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம், 40 இருக்கைகள் கொண்ட உணவகம், டிரைவர்களுக்கு ஓய்வு அறை ஆகியவை ரூ.6.84 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டன. ஓராண்டுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என பணிகளை துவங்கியபோதும் பத்து ஆண்டுகள் நீண்டன.
பணிகள் அனைத்தும் பூர்த்தியானதால் கடந்த நவ.30ல் தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு வர இருந்தது. அதனை திறந்து வைக்க இருந்த சுற்றுலாதுறை அமைச்சர் முகம்மது ரியாஸ் பல்வேறு காரணங்களால் வர இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அதனை நாளை (ஜன.4) சுற்றுலா அமைச்சர் திறந்து வைக்கிறார்.

