ADDED : மார் 15, 2025 11:31 PM

ராய்ச்சூர்: ''ராய்ச்சூர் மாவட்டத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் அரசு அலுவலகங்கள் பணி நேர மாற்றம் குறித்து முடிவெடுக்கப்படும்,'' என, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
ராய்ச்சூர் மாவட்டம், மான்வியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்தாண்டு ராய்ச்சூர் மாவட்டத்தில் 43 - 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு அதிகாரிகள், மதிய வேளையில், வெளியே செல்லும் பணியை தவிர்த்து விடுங்கள். மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்.
அரசு அலுவலகங்கள் பணி நேரத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக, அரசு ஆலோசனை நடத்தி முடிவெடுக்கும். வெளியே செல்ல வேண்டியிருந்தால், அதை காலை அல்லது மாலையில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
அதுபோன்று பொது மக்களும் மதிய நேரம் வெளியே செல்வதை தவிர்க்கவும். இவ்விஷயத்தில் பள்ளிகள், அனைத்து கல்வி மையங்கள் கவனம் செலுத்துங்கள்.
வெயில் காலத்துக்கு ஏற்ற உணவை சாப்பிடுங்கள். அதிகளவில் தண்ணீர் குடியுங்கள். கோடை வெயில் தாக்கத்துக்காக, அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.