வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல்: காரசார விவாதம்
வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல்: காரசார விவாதம்
UPDATED : ஏப் 02, 2025 03:21 PM
ADDED : ஏப் 01, 2025 11:49 PM

வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவில் இன்று (ஏப்.,2) மதியம், தாக்கல் செய்யப்பட்டது. ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், மசோதா தாக்கல் ஆனபோது அரசு தரப்பும், எதிர்க்கட்சி எம்பி.,க்களும் காரசாரமாக விவாதம் மேற்கொண்டனர்.
சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இவை, இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.
முக்கிய அம்சம்
அதில், வக்ப் வாரிய சொத்துக்களை நிர்வகிக்கும் கவுன்சிலில், பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவரையும் உறுப்பினராக்குவது, வக்ப் சொத்துக்களின் மீதான பிரச்னைகளில் மாவட்ட கலெக்டரே இறுதி முடிவு எடுப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, வக்ப் வாரிய சொத்துக்களை அரசு அபகரிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.பா.ஜ., - எம்.பி., ஜெகதாம்பிகா பால் கூட்டுக்குழுவுக்கு தலைமை வகித்தார். முஸ்லிம்கள் தரப்பை மளமளவென அழைத்து ஆலோசனை நடத்தி விரைவாக பணிகளை முடித்தார். கூட்டுக்குழுவில் இடம் பெற்று இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களின் பரிந்துரைகள் மட்டும் ஏற்றுக்
கொள்ளப்பட்டன.
இதனால், கொதிப்படைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்களின் பரிந்துரைகள் இறுதி அறிக்கையில் சேர்க்கப்படாததற்கு பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவற்றை பரிசீலித்து இறுதி அறிக்கையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது.
இந்நிலையில், திட்டமிட்டபடி வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கேள்வி நேரம் முடிந்தவுடன் மதியம் 12:00 மணிக்கு, பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
மத்தியில் பா.ஜ., அரசுக்கு ஆதரவு அளித்து வரும், முக்கிய கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேசமும் இந்த மசோதாவை ஆதரிப்பதாக ஏற்கனவே தெரிவித்து விட்டன. இதனால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது. ஆனாலும், சிறுபான்மையினர் தொடர்பான விவகாரம் என்பதால், எதிர்க்கட்சிகள் சபையில் தங்கள் வாதத்தை முன்வைத்து, தங்கள் எதிர்ப்பை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தனர். அதனால், அவ்வப்போது கூச்சலும், அமளியும் ஏற்பட்டன.
பாதுகாப்பு அதிகரிப்பு
பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் ஏற்கனவே இருக்கும் பலத்த பாதுகாப்போடு, கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பார்லிமென்டை நோக்கி வரும் சாலைகள், முக்கிய சந்திப்புகள் என டில்லியின் எல்லா முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு அசம்பாவிதமான சம்பவங்களும் ஏற்பட்டு விடாதபடி, நாடு முழுதும் கண்காணிப்புடன் இருக்கும்படி மத்திய உளவுத்துறையிலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.