ADDED : பிப் 15, 2024 04:37 AM
பெங்களூரு : 'சின்னத்திரை தொடர்கள், திரைப்படங்களில் சிறார்கள் நடிக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது கட்டாயம்' என அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, கர்நாடக தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கை:
சின்னத்திரை தொடர்கள், திரைப்படங்களில் சிறுவர் - சிறுமியர் நடிக்கின்றனர். இனி இவர்களை நடிக்க வைப்பதற்கு முன், தொடர்கள் தயாரிப்போர், திரைப்பட தயாரிப்பாளர்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம், அனுமதி பெறுவது கட்டாயம்.
சிறார்களை தினம் ஐந்து மணி நேரத்துக்கு அதிகமாக படப்பிடிப்பில் பயன்படுத்தக் கூடாது. அதே போன்று, மாதத்தில் 27க்கும் மேற்பட்ட நாட்கள் படப்பிடிப்பில் பயன்படுத்தக் கூடாது. சிறார்களின் கல்விக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழிலாளர் நலத்துறையின் இந்த உத்தரவை மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

