வேலைவாய்ப்பை உருவாக்குவதே அரசின் குறிக்கோள்: பிரதமர் மோடி
வேலைவாய்ப்பை உருவாக்குவதே அரசின் குறிக்கோள்: பிரதமர் மோடி
ADDED : ஜூலை 13, 2025 03:32 AM
புதுடில்லி:“வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே பா.ஜ., அரசின் குறிக்கோள். கடந்த 11 ஆண்டு களில் அனைத்து துறைகளிலும் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது,” என, பிரதமர் மோடி தெரிவித்தார்.
'ரோஜ்கர் மேளா' திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட 51,000 பேருக்கு, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பணி நியமன கடிதங்களை வழங்கி, பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:
புதிதாக பணியில் நியமிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். ஏழைகளுக்கு 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள், 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு புதிய சமையல் எரிவாயு இணைப்புகள், சூரிய சக்தி திட்டம் என, பல்வேறு அரசு நலத்திட்டங்கள் வாயிலாக, என் தலைமையிலான அரசு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். வேலைவாய்ப்பு, வருமானம் இல்லையென்றால் இது சாத்தியமில்லை. 11 ஆண்டுகளில், நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
மின்னணு உற்பத்தி ஐந்து மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. மொபைல் உற்பத்தி ஆலைகள் எண்ணிக்கை, 300 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், ராணுவ உற்பத்தி பற்றி பெருமையாக பேசப்படுகிறது. ராணுவ உற்பத்தியின் மதிப்பு, 1.25 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
ஒட்டுமொத்த உலகமும் தற்போது, நாட்டின் மக்கள் தொகை மற்றும் ஜனநாயகத்தின் வலிமையை அங்கீகரித்துள்ளது. நாட்டின் இளைஞர்கள் வலிமை மிகப்பெரிய மூலதனம்; எதிர்காலத்திற்கான உத்தரவாதம்.
இவ்வாறு அவர் பேசினார்.