கவர்னர் - தமிழக அரசு பிரச்னைக்கு தீர்வு காண்போம் !: ஒரு வாரம் அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட்
கவர்னர் - தமிழக அரசு பிரச்னைக்கு தீர்வு காண்போம் !: ஒரு வாரம் அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : ஜன 18, 2025 12:41 AM

புதுடில்லி: தமிழக கவர்னர், மாநில அரசுக்கு இடையே மோதல் போக்கு இன்னும் நீடித்து வருகிறதா? என, கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'துணைவேந்தர், மசோதா போன்ற விவகாரங்களில் ஒரு வாரத்துக்குள் இருதரப்பும் தீர்வு காண வேண்டும்; இல்லையெனில் நாங்களே இதற்கு தீர்வு காண்போம்' என, அறிவித்தனர்.
தமிழக கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்குமான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை தமிழக அரசு முன்வைத்து வருகிறது.
தொடர்ந்து, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளது.
பல்கலை துணைவேந்தர்கள் நியமன விவகாரம், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்காக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிரான ரிட் மனுக்கள், 2023ல் தாக்கல் செய்யப்பட்டன.
பிரமாண பத்திரம்
இந்த வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் இருந்து வரும் நிலையில், நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ''தமிழக கவர்னர் ரவி தொடர்பான வழக்கு விவகாரத்தில் தற்போதைய நிலைமையை கேட்டறிந்து, அதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டி இருக்கிறது.
''எனவே இந்த வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்,'' என, கோரிக்கை வைத்தார்.
ஏற்கனவே, இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வருவதால் ஒத்திவைப்பு கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், வில்சன், அபிஷேக் மனு சிங்வி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சபரீஷ் ஆகியோர், 'தமிழக கவர்னரின் நடவடிக்கைகள் அரசு செயல்பாடுகளில் ஏற்கனவே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்' என்று வாதங்களை முன்வைத்தனர்.
அரசு ஒப்புதல்
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'தமிழக கவர்னர் விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதா அல்லது பழைய நிலையை தொடருகிறதா?' என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'மோதல் போக்கு இதுவரை முடிவுக்கு வரவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில், கவர்னர் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
'முக்கிய மசோதாக்களுக்கு கூட, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடியே கவர்னரிடமிருந்து தமிழக அரசு ஒப்புதல் பெற்று வருகிறது.
'பல முக்கிய பல்கலைகளின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், அதை நிரப்புவதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்; இது தொடர்பாக நேற்று முன்தினம் புதிய இடையீட்டு மனுவும் தாக்கல் செய்துள்ளோம்' என, தெரிவித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள், இருதரப்பும் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை காணவில்லை என்றால், வழக்கை நாங்களே விசாரித்து இறுதியாக தீர்த்து வைப்போம்' என்றனர்.