'முடா' சர்ச்சைக்கு இடையில் கவர்னர் - முதல்வர் சந்திப்பு
'முடா' சர்ச்சைக்கு இடையில் கவர்னர் - முதல்வர் சந்திப்பு
ADDED : அக் 09, 2024 10:58 PM

பெங்களூரு : 'முடா' முறைகேடு சர்ச்சைக்கு இடையில், நீண்ட நாட்களுக்கு பின், கவர்னர் தாவர்சந்த் கெலாட் - முதல்வர் சித்தராமையா திடீரென நேற்று சந்தித்து பேசினர்.
'முடா' முறைகேடு குறித்து, முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்த நாள் முதல் இருவருக்கு இடையே மோதல் நிலவி வருகிறது.
கவர்னருக்கு எதிராக ஒட்டுமொத்த காங்கிரஸ் அரசே தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியது. முதல்வரும், கவர்னருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். கவர்னர் அளித்த அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
அமைச்சரவை கூட்டம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலும், கவர்னருக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'வங்கதேச பிரதமரை அந்நாட்டில் இருந்து வெளியேற்றியது போல், கவர்னரையும் கர்நாடகாவில் இருந்து வெளியேற்ற வேண்டும்' என, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கூறினார். உருவ பொம்மை எரிப்பு, கண்டன ஊர்வலம் என பல தரப்பட்ட போராட்டங்களை, கவர்னருக்கு எதிராக காங்கிரஸ் அரசு நடத்தியது.
இதனால், உளவு துறை அறிவுறுத்தலின்படி, கவர்னர் புல்லட் புரூப் கார் பயன்படுத்தி வருகிறார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல் கவர்னர் தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், பெங்களூரு வந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தம்பதிக்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், ராஜ்பவனில் நேற்று மதியம் விருந்தளித்தார். கவர்னர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுத்ததால், முதல்வர் சித்தராமையாவும் பங்கேற்றார்.
நீண்ட நாட்களுக்கு பின், கவர்னரும், முதல்வரும் அருகருகே அமர்ந்து பேசினர். சிரித்தபடி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.