கர்நாடக காங்., அரசு மீது ஜனாதிபதியிடம் கவர்னர் புகார்!: நிகழ்ச்சிகளில் சுதந்திரமாக பங்கேற்க முடியவில்லை
கர்நாடக காங்., அரசு மீது ஜனாதிபதியிடம் கவர்னர் புகார்!: நிகழ்ச்சிகளில் சுதந்திரமாக பங்கேற்க முடியவில்லை
ADDED : செப் 07, 2024 07:48 AM

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் அரசு மீது, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பரபரப்பு புகார் கடிதம் எழுதியுள்ளார். தன்னால் நிகழ்ச்சிகளில் சுதந்திரமாக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அவர் நீண்ட அறிக்கை அனுப்பி உள்ளதால், காங்கிரஸ் அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் போக்கு, அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், முதல்வர் மீது விசாரணை நடத்த, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், கடந்த மாதம் 17ம் தேதி அனுமதி அளித்தார்.
9ல் விசாரணை
இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் முதல்வர் ரிட் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. வரும் 9ம் தேதி, கர்நாடக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டியும்; 12ம் தேதி முதல்வர் தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வியும் தங்கள் வாதங்களை முன்வைக்க உள்ளனர்.
அக்டோபர் 2ம் தேதி முதல், உயர் நீதிமன்றத்துக்கு தசரா விடுமுறை என்பதால், கவர்னரை எதிர்த்து முதல்வர் தொடர்ந்த வழக்கில், இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி நாகபிரசன்னா ஏற்கனவே கூறி இருந்தார்.
இந்த விவகாரத்தில் கவர்னரை கண்டித்து, காங்கிரசார் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தினர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் அந்நாட்டில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா வீட்டை முற்றுகையிட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை அண்மையில் ஏற்பட்டது.
“இதேபோன்ற நிலைமை, கர்நாடக கவர்னருக்கும் ஏற்படும்,” என காங்கிரஸ் எம்.எல்.சி., ஐவான் டிசோஜா மிரட்டல் விடுத்திருந்தார். கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தையும் காங்கிரஸ் நடத்தியது.
போராட்டம்
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் என, மாநிலத்தை ஆளும் கட்சியினரே போராட்டம் நடத்தியது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், கவர்னருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், புல்லட் புரூப் காரும் இசட் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது குற்றஞ்சாட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் சமீபத்தில் புகார் அறிக்கை அனுப்பியுள்ளார்.
புல்லட் புரூப்
கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயம் குறித்து வெளியான தகவல்:
காங்கிரஸ் போராட்டத்தால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை ஆலோசனையின் பேரில், புல்லட் புரூப் கார் பயன்படுத்தத் துவங்கியுள்ளேன்.
போராட்டத்தின்போது, சில அமைச்சர்கள் வேண்டுமென்றே 'கர்நாடக விரோத கவர்னர், கோ பேக் கவர்னர்' என்று கோஷம் எழுப்பி உள்ளனர்.
ராஜ்பவன் மீது மாநில அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கிறது. மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தி, தன்னுடைய உருவப்படம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கவர்னர் மாளிகைக்குள் நுழையும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதல் போக்கு
இந்த தகவலை, மத்திய உள்துறை அமைச்சகத்தும் நீண்ட அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் காங்கிரஸ் அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் போக்கு, அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது.
கவர்னரின் நடவடிக்கையால், மாநில காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஒரு அரசியல் விமர்சகர் தெரிவித்தார். முதல்வர் சித்தராமையாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.