மாநகர் முழுதும் தீவிர கண்காணிப்பு போலீஸ் கமிஷனருக்கு கவர்னர் உத்தரவு
மாநகர் முழுதும் தீவிர கண்காணிப்பு போலீஸ் கமிஷனருக்கு கவர்னர் உத்தரவு
ADDED : செப் 24, 2024 10:04 PM
புதுடில்லி:மாநகர் முழுதும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீஸ் கமிஷனருக்கு, துணைநிலை கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, மாநகர போலீஸ் கமிஷனருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:
டில்லி மாநகர் முழுதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இந்தக் கண்காணிப்பு பணிக்கு சாதரண உடையில் பொறுப்பான மூத்த அதிகாரிகளை ஈடுபடுத்தவும் அதற்கான பட்டியலைத் உடனே தயாரித்து, தேர்வு செய்யப்பட்டுள்ள அதிகாரிகளின் பணியிடம், தொடர்பு எண்கள் ஆகியவற்றை கவர்னர் மாளிகை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். மாநகரில் நடக்கும் குற்றச் செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவர மிகப்பெரிய கண்காணிப்பு தேவைப்படுகிறது.
அதேபோல ரோந்து மற்றும் புறக்காவல் பூத்துகளில் பணியில் இருக்கும் போலீசார் தீவிர விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், கவர்னர் சக்சேனாவின் கண்காணிப்பில் இருப்பதால், மாநகரில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
டில்லி மாநகரப் போலீஸ் அறிக்கைப்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வரை 5,735 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே, 2023ம் ஆண்டில் 4,579 திருட்டு வழக்குகள் பதிவாகி இருந்தன.
அதேபோல், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வரை 570 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே 2023ல் 484 ஆக இருந்தன.