தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை


UPDATED : செப் 22, 2025 06:18 AM

ADDED : செப் 21, 2025 05:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2025 06:18 AM ADDED : செப் 21, 2025 05:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:'' இன்று முதல் அமலாகும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். வருமான வரிச்சலுகை மூலம் மக்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பு மூலம் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது,'' என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

நாளை அமல்


வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., இனி 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. இந்த சீர்திருத்தம் இன்று (22ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய உள்ளது.

இச்சூழ்நிலையில் டிவி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:

இன்று முதல் நவராத்திரி துவங்குகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முதல்நாளில், தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளோம். இன்று அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது.இந்த சீர்திருத்தத்துக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீர்திருத்தம், நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன், வர்த்தகத்தை எளிதாக்கி முதலீட்டை அதிகரிக்கும்.

வரிகளால் மக்கள் அவதி




2014 ல் பிரதமராக பதவியேற்ற போது, ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியானது. அதில், இந்தியாவில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. நிறுவனம் ஒன்று ஒரு பொருளை பெங்களூருவில் இருந்து ஐதராபாத் கொண்டு செல்வதில் பிரச்னைகள் இருந்தது. முதலில், அதனை பெங்களூருவில் இருந்து ஐரோப்பாவுக்கும், அதன் பிறகு அந்த பொருளை ஐரோப்பாவில் இருந்து ஐதராபாத்துக்கும் கொண்டு சென்றதாக தெரிய வந்தது. அப்போது, இருந்த வரிகள் மற்றும் சுங்கச்சாவடிகளால் ஏற்பட்ட பிரச்னை இது. லட்சக்கணக்கான நிறுவனங்கள், மக்கள், பல்வேறு வரிகளால் அவதிப்பட்டனர். பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிக செலவு செய்தனர். அந்த சூழ்நிலையில இருந்து விடுவிக்க வேண்டியது அத்தியாவசியமாக இருந்தது.

2017 ல் ஜிஎஸ்டியை அமல்படுத்திய போது இந்தியா, பழைய வரலாற்றை மாற்றி புதிய வரலாற்றை நோக்கி திரும்பியது. வர்த்தகர்களும், மக்களும் பல மறைமுகவரிகளால் அவதிப்பட்டு வந்தனர்.


குடும்பங்கள் மகிழ்ச்சி


ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, ஒவ்வொரு மாநிலங்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்தோம். அனைவரின் ஒருமித்த முடிவோடு பெரிய வரி சீர்திருத்தம் அமலானது. மத்திய மாநில அரசுகளின் முயற்சி காரணமாக, பல வரி அடுக்கு பின்னணியில் இருந்து நாடு விடுபட்டது. ஒரே நாடு, ஒரே வரி என்ற கனவு நனவானது. இன்று முதல் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். விரும்பியதை எளிதாக வாங்கலாம். வரி குறைப்பால் குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும்.சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.

ஜிஎஸ்டி அமலாக்கம் நாட்டின் பெரிய வரி சீர்திருத்தம். தற்போது வரி கட்டமைப்பு எளிமைபடுத்தப்பட்டு உள்ளது. இந்த சீர்திருத்தம் நாட்டின் சேமிப்புத் திருவிழா. பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரிகளினால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டியால் அகன்றன.



நாளை முதல் ஜிஎஸ்டி வரி அடுக்கில் இனிமேல் 2 விதங்கள் தான் இருக்கும்.99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி வரம்பில் வந்துள்ளன. உணவு, மருந்து , பல்வேறு வீட்டு உபயோக பொருட்களின் விலை இனி குறையும். சிக்கலான வரி கட்டமைப்பில் இருந்து நுகர்வோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் துவங்குகிறது.

பலன்


வருமான வரியிலும், ஜிஎஸ்டியிலும் சலுகை அளித்துள்ளோம். நடுத்தர மக்கள் இனி எளிதாக தங்களது இலக்குகளை நிறைவேற்றுவார்கள். இந்த வரி சீர்திருத்தத்தால் சிறிய கடைக்காரர்கள் கூட பலன் அடைவார்கள். மக்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்க முடியும். டிவி, டூவீலர்கள், கார்கள் உள்ளிட்டவற்றை எளிதாக வாங்க முடியும். ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை நுகர்வோர்களுக்கு கொண்டு செல்ல வணிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இரண்டாம் தலைமுறை சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.

வரிச்சலுகை


கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களுக்கு பல கனவுகள் நோக்கங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் ரூ.12 லட்சம் வரை வருமான வரி சலுகை அளிக்கப்பட்டது. அரசு வழங்கிய முதல் பரிசு. அரசு பரிசளித்தது. ரூ.12 லட்சம் வரை வரிச்சலுகை அளித்த போது மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தற்போது இரண்டாம் பரிசாக ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அமல் செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜிஎஸ்டிகுறைப்பு மூலம் அவர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்ற முடியும்.



எதிர்காலத்துக்காக


சீர்திருத்தம் என்பது தொடர்ச்சியாக நடக்கும் நடவடிக்கை.காலமும் தேவையும் மாறும் போது மாற்றத்தை ஏற்பது அவசியம். மாற்றங்கள் ஏற்படும் போது நாட்டில் மாற்றம் தேவைப்படுகிறது. அடுத்த தலைமுறை சீரதிருத்தம் மிகவும முக்கியமானது. நாட்டின் தற்போதைய தேவை மற்றும் எதிர்காலத்தை மனதில் வைத்து ஜிஎஸ்டி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுயசார்பு இந்தியா


சுய சார்பு இந்தியாவே இந்த நேரத்தில் தேவையாக உள்ளது. தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கு சிறு குறு நடுத்தர தொழில்துறையினர் ஊக்கம் அளிக்கின்றனர். இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் வெளிநாட்டு பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு கடைகளும் அந்த பொருட்களை விற்க வேண்டும். சுதேசி 2.0 இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.



உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தினால் நாட்டில் வளர்ச்சி ஏற்படும். இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். சுய சார்பு இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும். உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்து, முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us