குஜராத்தில் 540 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 வயது பெண்; மீட்பு பணி தீவிரம்
குஜராத்தில் 540 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 வயது பெண்; மீட்பு பணி தீவிரம்
ADDED : ஜன 07, 2025 07:24 AM

ஆமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேரை கிராமத்தில், 540 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 18 வயது இளம் பெண் விழுந்துள்ளார். அந்த பெண்ணை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேரை கிராமத்தில் 540 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில், 18 வயது பெண் ஒருவர் தவறி விழுந்தார். அந்த பெண்ணை மீட்கும் பணியில் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைக் குழுக்கள் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 490 அடி ஆழத்தில் சிக்கி உள்ள பெண்ணுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 6:30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண்ணை மீட்கும் முயற்சி தீவிரமாக நடக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கட்ச் மாவட்ட அதிகாரி அருண் ஷர்மா கூறியதாவது: ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண்ணுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் சுயநினைவற்ற நிலையில் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.