ADDED : ஜன 15, 2025 12:30 AM
சபரிமலை; சபரிமலையில் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது பிரபல மலையாள பாடலாசிரியர் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு வழங்கப்பட்டது.
கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம் போடும் இணைந்து கலைத்துறையில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2012 -ல் யேசுதாசுக்கு இந்த விருது வழங்கி துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வீரமணி ராஜு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா, சித்ரா, கங்கை அமரன் உள்ளிட்ட ஏராளமான பாடகர்கள் இந்த விருதை பெற்றுள்ளனர்.
14 வது ஆண்டு விருதாக சபரிமலையில் நேற்று கேரளாவை சேர்ந்த கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஐயப்ப காருண்யம், சரண மயம், ஐயப்ப பூஜை போன்ற ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். ஹரிவராசனம் விருது நினைவு பரிசு, ஒரு லட்ச ரூபாய், பாராட்டு பத்திரம் ஆகியவை அடங்கியதாகும்.
கேரள தேவசம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வாசன் இந்த விருதை வழங்கினார்.
இதில் தாமோதரன் நம்பூதிரி பேசியதாவது: தேவசம்போர்டில் ஊழியராக பணியாற்றியுள்ளேன்.விருதை அனைத்து தேவசம் ஊழியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
பாங்கோடு சாஸ்தா கோயிலில் பூஜாரியாக வேலை பார்க்கும் போது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபட்டேன். பூஞ்ஞாறில் பூஜாரியாக இருந்தபோது சம்பளமும், பக்தர்கள் தரும் தட்சணையும் வாங்குவதில்லை என்று முடிவு எடுத்தேன். இது அங்கு என் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.
கோயிலில் நிவேத்யத்தை ஏழைகளுக்கு வழங்கினேன். சமூக கலாசார துறையில்என்னுடைய செயல்பாடுகள் தான் நான் ஹரிவராசனம் விருது பெற காரணமாய் அமைந்தது.
சபரிமலையில் அனைவரும் ஒன்று என்ற ஒரு மிகப்பெரிய தத்துவத்தை ஐயப்பன் கற்பித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த், உறுப்பினர் அஜி குமார்,சுந்தரேசன், எம்.எல்.ஏ.க்கள் பிரமோத் நாராயணன். கணேஷ்குமார் பங்கேற்றனர்.